மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் குஜராத் அரசுடன் இணைந்து கூட்டுத் திட்டத்தின் மூலம் தொடங்கிய மஹிந்திரா குஜராத் டிராக்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரை குரோமேக்ஸ் அக்ரி எக்கியூப்மென்ட் என மாற்றுவதாக திங்கள்கிழமை அறிவித்தது.
இந்த கூட்டுத் திட்டத்தின் கீழ் முதல் முதலாக "டிராக்ஸ்டார்' என்ற புதிய ரக டிராக்டர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மஹிந்திரா & மஹிந்திரா தலைவர் ( வேளாண் உபகரண பிரிவு) ராஜேஷ் ஜெஜூரிகர் தெரிவித்ததாவது:
மஹிந்திரா நிறுவனத்தின் பயணத்தில் குரோமேக்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதிலும், அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதிலும் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும்.
தற்போது, 30-50 குதிரைத் திறன் (ஹெச்பி) பிரிவில் நவீன தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "டிராக்ஸ்டார்' என்ற புதிய டிராக்டர் மதிப்பு மிகுந்த பொருள்களை விரும்பும் விவசாயிகளை கவனத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே திறனைக் கொண்ட டிராக்டர்கள்தான் வேளாண் துறையில் 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது என்றார் அவர்.
குரோமேக்ஸ் அக்ரி எக்கியூப்மெண்ட் கூட்டு நிறுவனத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 60 சதவீத மூலதனத்தையும், குஜராத் அரசு 40 சதவீத மூலதனத்தையும் கொண்டுள்ளது.