ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதம் 6,33,884 வாகனங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சென்ற ஆண்டு மே மாதம் 5,83,117 வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்த நிலையில், இவ்வாண்டு மே மாத விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி பெற்று 6,33,884-ஆக உள்ளது. பருவ மழை உரிய காலத்தில் தொடங்கியதால், பொருளாதார நிலை சாதகமாகவே இருக்கும் என்று தெரிகிறது. இதனால் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், குறிப்பாக கிராமப்புறங்களில் மக்களின் பொருளாதார நிலை மேம்படும். இது வாகன விற்பனைக்கு உதவிகரமாக இருக்கும். அனைத்து இரு சக்கரப் பிரிவுகளிலும் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
வங்கதேசத்தின் ஜெஸ்ஸரில் அமைத்த கூட்டு நிறுவனத்தின் கீழிலான ஆலையில் கடந்த மே மாதம் வாகன உற்பத்தி தொடங்கியது.
ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வாகனங்களை அந்த ஆலையில் உற்பத்தி செய்ய இயலும். கொலம்பியாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஹீரோ மோட்டோகார்ப் ஆலை செயல்பட்டு வருகிறது. அதையடுத்து, வெளிநாட்டில் அமைக்கப்படும் இரண்டாவது ஆலை இதுவாகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.