ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வாகனங்களின் விலை உயரும் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், இதர நிறுவனங்களைப் போலவே நாங்களும் வரிக் குறைப்பை எதிர்பார்த்துக்காத்திருப்பதாக டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100 மாடல், 10 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை புரிந்திருப்பதையடுத்து, கோவையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட வைத்தியநாதன்கூறியதாவது:
டி.வி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்புகள் 1980-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் சுமார் 1.20 கோடி வாடிக்கையாளர்களைச் சென்றடைந்துள்ளன. இந்நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பானஎக்ஸ்.எல்.100 கடந்த 2015 அக்டோபரில் விற்பனைக்கு வந்து, 18 மாதங்களில் 10 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. எக்ஸ்.எல். 100 வாகனத்தின் வெற்றியைக் கருத்தில்கொண்டு, ஏற்கெனவே உள்ள 4 வண்ணங்களுடன் காப்பர் ஷைன், சில்வர் கிரே என்ற இரு புதிய வண்ணங்களில் விற்பனை தொடங்கியுள்ளது.
பி.எஸ்.4 தொழில்நுட்பத்தின்கீழ், இந்த வாகனங்களைத் தயாரிக்க கூடுதல் செலவு ஏற்பட்டாலும் விலையில் பெரிய அளவில் மாறுதல் இல்லை. அதேநேரம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வாகனங்களின்விலை உயரக் கூடும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
எனவே, வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம். தொடர்ந்து, பல பொருள்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டு வருவதால், இருசக்கர வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 28% என்பதுகுறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.