சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடனான தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள படத்தை இயக்கி வருகிறார். இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்கும் வில்லனாக எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறார்கள். இசை - ஹாரிஸ் ஜெயராஜ். ஹைதராபாத் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்போது குஜராத்தில் முக்கியமான காட்சிகளைப் படம்பிடித்துவருகிறார் முருகதாஸ். டிசம்பர் 23 வரை இங்குப் படப்பிடிப்பு நடைபெறும். பிறகு புணேவில் தொடரவுள்ளது.
இந்தப் படத்தின் தலைப்பில் ஷிவா என்று வருகிற மாதிரி யோசித்துவருகிறார் முருகதாஸ். ஏஜண்ட் ஷிவா என்று முதலில் பெயர் தேர்வானது. ஆனால் இந்தத் தலைப்பு தமிழுக்குப் பொருந்தாது என்பதால் வேறு பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மொழிகளுக்கும் ஏற்றாற்போல இருக்கவேண்டும், எந்தத் தலைப்பாக இருந்தாலும் அதில் ஷிவா என்கிற பெயர் இடம்பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முருகதாஸ்.