பாலிவுட் நடிகர் ஷாரூக் கானுக்கு தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள மெளலானா ஆஸாத் தேசிய உருது பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
ஹைதராபாதில் உள்ள உருது பல்கலைக்கழகத்தின் 6-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், எம்.பில். மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு (பிஹெச்டி) படித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், உருது மொழி மற்றும் அதன் கலாசாரத்தை மேம்படுத்துவதற்குப் பாடுபட்ட நடிகர் ஷாரூக் கான், ரேக்தா அறக்கட்டளையின் நிறுவனர் சஞ்சீவ் சராஃப் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை பல்கலைக்கழக வேந்தர் ஜஃபர் சரேஷ்வாலா வழங்கினார்.
முன்னதாக, இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதாக இருந்தார்; பின்னர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் கலந்து கொள்ளவில்லை.