ஏ.ஆர்.முருகதாஸ் விமரிசனம் உள்ளிட்ட தேசிய விருது சர்ச்சைகளுக்கு பிரியதர்ஷன் பதில்!

விருது பெற்ற எந்தப் படங்களையும் அவர் பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
ஏ.ஆர்.முருகதாஸ் விமரிசனம் உள்ளிட்ட தேசிய விருது சர்ச்சைகளுக்கு பிரியதர்ஷன் பதில்!

64-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர். அதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மராத்தியில் வெளியான 'காசவ்' தேர்வானது. சிறந்த நடிகராக அக்ஷய் குமாரும் ('ருஸ்தம்' - ஹிந்திப் படம்), சிறந்த நடிகையாக சுரபி லட்சுமியும் ('மின்னாமினுங்கு' - மலையாளப்படம்) அறிவிக்கப்பட்டார்கள். தேசிய விருதை அக்ஷய் குமார் பெறுவது இதுவே முதன்முறையாகும். 

சிறந்த இயக்குநருக்கான விருது மராத்தி இயக்குநர் ராஜேஷ் மாபுஷ்கருக்கு கிடைத்தது. 'வெண்டிலேட்டர்' என்ற திரைப்படத்தை இயக்கியதற்காக அவர் இவ்விருதுக்கு தேர்வானார். 

பிராந்திய மொழிப்படங்களைப் பொருத்தவரை தமிழில் 'ஜோக்கர்' படத்துக்கு விருது கிடைத்தது. சிறந்த பாடலாசிரியாக வைரமுத்துவும், ஒளிப்பதிவாளராக திருவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அதேபோன்று சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது '24' படத்துக்குக் கிடைத்தது. சுப்ரதா சக்ரவர்த்தி, ஸ்ரேயஸ் கெடேகர் மற்றும் அமித் ராய் ஆகிய மூன்று பேரும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளனர். 

சிறந்த பின்னணிப் பாடகர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரய்யர் தேர்வு செய்யப்பட்டார். 'ஜோக்கர்' படத்தில் இடம்பெற்ற 'ஜாஸ்மின்' பாடலைப் பாடியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

இந்நிலையில் தேசிய விருது குறித்து பலவிதமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. டங்கல் படத்துக்காக அமீர் கானுக்கு விருது அளிக்கப்படாமல் அக்‌ஷய் குமாருக்கு விருது அளிக்கப்பட்டது அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பிரியதர்ஷன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

அரசு விருது விழாக்களில் கலந்துகொள்வதில்லை என அமீர் கான் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏன் விருது வழங்கப்படவேண்டும்? அவர் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பாதபோது அவருக்கு ஏன் அதை வழங்கவேண்டும்? சமீபகாலமாக விருதுகளைத் திருப்பித் தரும் போக்கு உருவாகியுள்ளது. எனவே நாங்கள் இதுபோல அமீர் கான் விஷயத்தில் நடந்துவிடக்கூடாது என்பதால் அவருக்கு வழங்கவில்லை. 2007-ல் தாரே ஜமீன் பார் படத்துக்காக அமீர் கானுக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அவ்விருதைப் பெற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் ஒரு நடிகருக்குத் தேசிய விருது அறிவித்து அவர் விருதைப் பெற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அது மத்திய அரசுக்கும் தேசிய விருதுக்கும் அவமானம் ஆகும். தகுதியின் அடிப்படையிலேயே ஒரு நடிகரை அங்கீகாரம் செய்கிறோம். அக்‌ஷ்ய் குமாருக்கு ஏர்லிஃப்ட், ரஷ்டம் என இரு படங்களிலும் சிறப்பாக நடித்ததற்காக விருது அளிக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்பக் காரணங்களால் ஒரு படத்துக்காக அவருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அக்‌ஷய் குமாருடன் பல படங்கள் பணியாற்றியதால் அவருக்கு விருது வழங்கினீர்களா என்கிற கேள்விக்கு, நாங்கள் இருவரும் ஒன்றாகப் பணிபுரிந்ததால் அவருக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாதா? அவர் நன்றாக நடித்தால் அதற்குரிய மதிப்பு அளிக்கப்படவேண்டும் புலிமுருகன், ஜனதா காரேஜ், Munthirivallikal Thalirkkumbol ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மோகன் லாலுக்குச்  சிறப்புத் தேர்வில் கெளரவிக்கப்பட்டுள்ளார். இதில் ஒப்பம் படத்தை நாங்கள் சேர்க்கவில்லை. ஏனெனில் அது நான் இயக்கியது என்று பதில் அளித்துள்ளார். 

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த பதில்: விருது பெற்ற எந்தப் படங்களையும் அவர் பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். அந்தப் படங்களைப் பார்க்காமல் முருகதாஸ் எப்படி அதுபோல கருத்து சொல்லலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com