இயக்குநர் அட்லி, தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, ராதாரவி நடிப்பில் உருவாகி வரும், 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தைத் தயாரித்துவருகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுகிறது.
இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் மாறியது ஏன் என்கிற கேள்விக்கு இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அட்லி அளித்த பதில்:
நான் இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்தாலும் ஏ.ஆர். முருகதாஸ் சார் என் திறமை மீது மதிப்பு வைத்து ராஜா ராணி படத்தைத் தயாரித்தார். அதேபோல நானும் பல திறமைகளை அறிமுகப்படுத்த ஆவலாக உள்ளேன்.
மகேந்திரன் சார் மூலமாக 'சங்கிலி புங்கிலி கதவ தொற' இயக்குநர் பற்றி அறிந்தேன். ஒரே காட்சி பற்றி என்னிடம் கூறினார். அதிலேயே நான் அசந்துவிட்டேன். உடனே திரைக்கதையுடன் வாருங்கள் என்று இயக்குநரிடம் கூறினேன் என்றார்.
இந்தப் படம் தவிர மேலும் இரு படங்களை தயாரிக்கவுள்ளார் அட்லி. சூர்யா பாலகுமாரன், அசோக் ஆகியோர் அப்படங்களை இயக்குகிறார்கள்.