பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் இன்று மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 70. சமீபகாலமாக வினோத் கண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வினோத் கண்ணாவின் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் சமூகவலைத்தளங்கள் வழியாக இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
இதையடுத்து இன்றிரவு 8.30 மணிக்கு மும்பையில் நடைபெறுவதாக இருந்த பாகுபலி 2 படத்தின் பிரத்யேகக் காட்சி ரத்தாகியுள்ளது. இதுகுறித்து பாகுபலி 2 படத்தரப்பில் கூறியதாவது: வினோத் கண்ணா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். இச்செய்தி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருடைய மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நடைபெறுவதாக இருந்த பாகுபலி 2 படத்தின் பிரத்யேகக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படத்தின் ஹிந்தி உரிமையைக் கைப்பற்றியிருக்கும் கரண் ஜோஹர், இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட படக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.