எந்த இடையூறும் இன்றி வழக்கம் போல் படப்பிடிப்பு நடைபெறும் என்று தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் மிக தெளிவாக இருக்கிறது. இப்பிரச்னையில் சில விஷயங்கள் திரிக்கப்பட்டுள்ளன. அதை தெளிவுப்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது.
ஃபெப்சி தொழிலாளர்களுடன் தயாரிப்பாளர்கள் வேலை பார்க்க மாட்டோம் என்ற சொன்னதாக சொல்லப்பட்டு வருகிறது. நாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை. தொழிலாளர்கள் எங்களின் எதிரிகள் அல்ல. அவர்களின் வயிற்றில் அடிப்பது எங்களின் வேலை இல்லை.
ஃபெப்சி தொழிலாளர்களுடன் மட்டும்தான் வேலை பார்ப்போம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தொழிலாளர்கள் தங்களின் சம்பளம் பற்றி பேசும் அதே நேரத்தில், நாங்கள் எங்களின் உரிமை குறித்துப் பேசவும் தகுதியுள்ளது.
சம்பளத்தைக் குறைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இதில் சில பொது நிபந்தனைகள் இருக்கின்றன. அதைத்தான் நாங்கள் ஏற்கவில்லை.
இது பல காலமாக வழக்கத்தில் இருக்கும் விஷயம் என்கிறார்கள். தவறு என்றால் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதை அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: ஜி.எஸ்.டி. தொடங்கி இன்றைய சினிமாவில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தயாரிப்பாளர்கள் தொடங்கி அனைவருக்கும் உள்ளது. தொழிலாளர்களின் நிபந்தனையை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பும் உள்ளது. அதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த இடையூறு வந்தாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும். வழக்கமான படப்பிடிப்புக்கு பிரச்னை வந்தால் சமாளிக்கவும் தயாராக இருக்கிறோம். ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் எங்களுக்கு ஆதரவு அளித்து படப்பிடிப்பு கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. அதே போல் பல்வேறு துறை சார்ந்த கலைர்களுக்கு எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
தொழிலாளர்கள் தங்களின் உரிமையை கேட்பது போல், நாங்கள் எங்களின் உரிமையைக் கேட்கிறோம். அந்த வலியை உணர்ந்து கொள்ளுங்கள் என்றார் பிரகாஷ்ராஜ்.