சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்த நிகழ்ச்சிக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கவில்லை. 100 சதவிகிதத்துக்கும் மேலாக ரேட்டிங்குகள் உயர்ந்துள்ளன. நிகழ்ச்சியின் வடிவமும் மாறிக்கொண்டு வருகிறது. நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பினரும் பார்க்கவேண்டும் என எண்ணுகிறோம். எங்கள் பொறுப்பை உணர்ந்துள்ளோம். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அதிக அழுத்தம் கொண்ட சூழலில் உள்ளார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கமல் நிகழ்ச்சிகள் மூலமாக சில மணி நேரம் வெளி உலகைக் காண்கிறார்கள். மற்ற நேரங்களில் அந்தக் குழுவினருடன்தான் உள்ளார்கள். அவர்களை எப்போதும் கேமராக்கள் கண்காணித்துக்கொண்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.