சென்னை: நடிகர் அஜித்தின் நடிப்பில் நாளைக்கு திரைக்கு வரவுள்ள 'விவேகம்' திரைப்படம் தமிழ் சினிமா பெருமைப்படும் ஒரு படமாக இருக்கும் என்று அத்திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் தெரிவித்துள்ளார்.
சிவாவின் இயக்கத்தில், நடிகர் அஜித்தின் நடிப்பில் நாளை திரைக்கு வரவுள்ள படம் 'விவேகம். அஜித் சர்வதேச உளவாளியாக நடித்துள்ளதாக கூறப்படும் இத்திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'விவேகம்' திரைப்படம் தமிழ் சினிமா பெருமைப்படும் ஒரு படமாக இருக்கும் என்று அத்திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
விவேகம் திரைப்படத்தில் பணியாற்றியது நம்ப முடியாத ஒரு அனுபவம். இந்த திரைப்படத்தின் திரைக்கதையும் சரி, அது உருவாக்கப்பட்டுள்ள விதமும் சரி, இது வரை நாம் திரையில் காணாதஒன்றாக இருக்கும். ஒரு படத்தினை பிரமாண்டமாக தயாரிப்பது என்பது வேறு; சர்வதேச தரத்தில் உருவாக்குவது என்பது வேறு. ஆனால் விவேகம் இரண்டும் கலந்த ஒன்றாக இருக்கும்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் இதுவரை மனிதர்கள் யாரும் அதிகமாக செல்லாத இடங்களில் எல்லாம் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உறைய வைக்கும் குளிரில் காட்சிகளைப் படமாக்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. ஆனால் படக்குழுவினர் அதனை திறமையாக செய்துள்ளனர்.
இந்த திரைப்படத்திக்கென அரங்க வடிமைப்பில் சர்வதேச சாயலில் ஒரு குறிப்பிட்ட பணியினை பின்பற்றியுள்ளேன். அது திரையில் நன்றாக வெளிப்பட்டிருப்பதாக அனைவரும் கருதுகின்றனர்.
நடிகர் அஜித்துடன் இணைந்து பணியாற்றுவது என்பது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதும் கவுரமும் ஆகும்.அவரிடம் நம்மால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளாமல் இருக்கவே முடியாது.
படத்தின் இயக்குனர் ஷிவா எனக்கு இந்தப் படத்தில் மிகுந்த சுதந்தரமும் ஆதரவும் கொடுத்தார். கலை அமைப்பு அமைப்பு தொடர்பான பல்வேறு நுணுக்கங்களை கற்றுக் கொள்ள அது வாய்ப்பு கொடுத்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.