அஞ்சலி - ஜெய் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி நீண்ட காலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. 'எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. சில பிரச்னைகளால் அஞ்சலி சினிமாவை விட்டே காணாமல் போனார். பிரச்னைகள் ஓய்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் அஞ்சலி. சமீபத்தில் வெளியான தரமணி அஞ்சலியின் முக்கியமான மறு பிரவேசமாகக் கவனிப்பட்டது.
இந்நிலையில் ஜெய் அஞ்சலி ஜோடி ஐந்து வருடங்கள் கழித்து 'பலூன்’எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. டிவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடி தங்களுடைய அன்பைப் பகிர்ந்து வருவது அனைவரும் அறிந்ததுதான். விரைவில் திருமணம் பற்றிய நல்ல செய்தி தருவார்கள் என்கிறது அவர்களது நட்பு வட்டம்.
படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஜனனி ஐயர் ப்ளாஷ் பேக்கில் வரும் கதாநாயகியாக நடித்துள்ளார். த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இப்படத்தின் டீஸர் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்து, சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளிவரும் என்று அறிமுக இயக்குனர் சினிஷ் தெரிவித்துள்ளார்.