நடிகர் அஜித்தின் "விவேகம்' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் 28 திரையரங்குகளின் உரிமையாளர்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, முதல் ஐந்து நாள்களுக்குத் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சினிமா டிக்கெட் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தற்போது நடிகர் அஜித் நடித்து வெளியாகியிருக்கும் "விவேகம்' திரைப்படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, சில திரையரங்குகளில் பன்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த திரையரங்குகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி தமிழக அரசும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 திரையரங்குகளின் உரிமையாளர்கள், செப்டம்பர் 11 -ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.