ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத் திறமையுடன் திரைத்துறையில் தனுஷ் இயங்கி வருகிறார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றியும் பெற்ற தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகக் கவனத்துடன் சிரத்தையுடன் எடுத்து வெற்றி பெறுவார் தனுஷ். இதற்குக் காரணம் அவரின் திறமையும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலுள்ள ஆர்வமும்தான்.
அதைப் பற்றி அவரிடம் கேட்ட போது, 'கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு நான் வேலை செய்தாலும், என்னுடன் பணி புரிபவர்களிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது எனக்குப் பிடிக்கும். பாலிவுட்டில் படத் தயாரிப்பு சார்ந்த விஷயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன். ஆனால் ஹாலிவுட்டில் முற்றிலும் வேறொரு புதிய திறப்பு. ஹாலிவுட் திரைப்பட இயக்கம் பற்றிய எனது புரிதலை விரிவாக்கியுள்ளது’ என்றார் தனுஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, படத்திலும், ஹாலிவுட் பெண் இயக்குநர் மர்ஜானே சத்ரபி இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளிவரும் நிலையில் நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படம் ஒன்றினை தனுஷ் இயக்கப் போவதாகவும், அதில் அவரே கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன. விரைவில் இப்படம் குறித்த படக்குழுவினரின் அறிவிப்பு வெளியாகும் என்கிறது தனுஷ் தரப்பு.