இயக்குநர் சுந்தர்.சி மீதான புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட கதாசிரியரான வேல்முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடருக்கான கதையை என்னிடமிருந்து இயக்குநர் சுந்தர்.சி வாங்கினார். இதற்காக ரூ.50 லட்சம் தருவதாகக் கூறிவிட்டு, ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு மீதித்தொகையை தர மறுத்தவிட்டார். இந்த நிலையில் கதைக்கான உரிமை கோரி திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.
இந்த வழக்கைத் திரும்பப் பெறக்கூறி இயக்குநர் சுந்தர்.சி மற்றும் அவரது ஆட்கள் என்னை மிரட்டுகின்றனர். இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தந்தும் நடவடிக்கை இல்லை. எனவே சுந்தர்.சி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகரை போலீஸார் விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டார்.