நடிகர் சூர்யா நடித்துள்ள சிங்கம்-3 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியுள்ளதாவது: நடிகர் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்த சிங்கம் 3 திரைப்படம், பிப்ரவரி 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இணைய சேவை வழங்குநர்கள் சங்கத்தின் கீழ் 135 உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் படத்தை சட்ட விரோதமாக இந்தியா, வெளிநாடுகளில் இணையதளத்தில் வெளியிடத் தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஞானவேல்ராஜா கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "ரிட்' மனுவாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. "சிவில்' வழக்காக மட்டுமே தொடர முடியும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதையடுத்து அந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.