கேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழில் பல பிரபல பாடல்களைப் பாடியுள்ள வைக்கம் விஜயலட்சுமிக்கும் சந்தோஷுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. மார்ச் 29 அன்று கேரளாவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் தன்னுடைய திருமணம் நின்றுபோனதாக விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமணத்துக்குப் பிறகு நான் சினிமாவில் பாடக்கூடாது என்று சந்தோஷ் கூறினார். பள்ளியில் இசை ஆசிரியராகப் பணிபுரிந்துகொள் என்றார். முதலில் என் திறமையை ஊக்குவித்த சந்தோஷ், இப்போது என் லட்சியத்துக்கே தடை போடுகிறார். அதேபோல முதலில் என் வீட்டில் வாழ்வதாகச் சொன்னார். இப்போது அவருடைய உறவினர் வீட்டில் வாழலாம் என்கிறார்.
இதுபோன்ற சூழலில் அவரைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதம் இல்லை. எனவே திருச்சூரில் நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இம்முடிவுக்காக யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. இது என் சொந்த முடிவு என்று கூறியுள்ளார்.
வைக்கம் விஜயலட்சுமியின் திருமணச் செய்தி ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலரையும் மகிழ்ச்சியடைய வைத்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.