தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இன்று நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் போராட்டமே முக்கியம். நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்துக்கு ஊடக வெளிச்சம் வேண்டாம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய போராட்டத்தில் ரஜினி, அஜித், சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகர் நடிகைகள் கலந்துகொண்டுள்ளார்கள். இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.