கேளிக்கை வரியை எதிர்த்து நான்கு நாள்களாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் திரையரங்குகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் புதிய டிக்கெட் விலை அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் 1,200 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலவரையற்ற போராட்டம் நடைபெறுகிறது.
திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளியான படங்களைத் திரையிடுவதிலும், வெளியாகவுள்ள படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்காக டிக்கெட் கட்டணம் உயரவுள்ளது. நாளை முதல் ரூ. 120 டிக்கெட்டுகள் கூடுதலாக ஜிஎஸ்டி சேர்த்து (28%) ரூ. 153.60க்கு விற்கப்படவுள்ளது. ரூ. 50 முதல் ரூ. 100க்கு விற்கப்பட்டும் டிக்கெட்டுகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.