பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கடந்த வாரம் ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதேசமயம், சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகிவருகின்றன.
தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.
நடிகை மிஷா கோஷல் ட்விட்டரில் கூறியதாவது:
‘வெளியே இருந்து ஓவியாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை. உள்ளே உள்ளவர்கள் ஜூலிக்கு ஆதரவளிப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
பக்குவம் என்பது நம்மைக் காயப்படுத்தியவர்களிடம் புன்னகையைத் தெரிவித்து தவிர்ப்பதுதான். அதற்குப் பதிலாகப் பழிவாங்கக்கூடாது. இதைத்தான் பிக் பாஸில் ஓவியா செய்கிறார். நானும் இதைப் பின்பற்றப்போகிறேன்.
ஒவ்வொரு நாளின் முடிவிலும் காயத்ரி தானொரு முட்டாள், மூளையில்லாதவர் என நிரூபிக்கிறார்.
காயத்ரி, ஓவியாவிடம் நீ யாரு, நீ யாரு எனக் கேட்கிறார். நான் காயத்ரியிடம் கேட்க விரும்புகிறேன், நீ யாரு? அவர் எல்லோருக்கும் தாயாக இருக்க முயற்சி செய்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தினமும் பார்க்கும் அளவுக்குச் சென்றுவிட்டேன்.
ஓவியா நல்ல மனதுடையவர். இப்போதும் அவர் ஜூலியிடம் பேச விரும்புவார். ஓவியா மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது.
இன்றைய நாளின் மிகச்சிறந்த நகைச்சுவை - பொய் சொல்லக்கூடாது என்று ஜூலி சொன்னது. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அது என்ன வேற மாதிரி கோபம் ஜூலி? உன்னைப் பார்த்தால் மொத்தத் தமிழ்நாட்டுக்கும் கோபம் வருகிறது. அதனால் கோபத்தை மூடிக்கொள்ளவும். அதேபோல பாடுவதையும் நிறுத்திக்கொள்ளவும்’ என்று வரிசையாக பிக் பாஸ் குறித்தும் ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ரகுராம், ஜூலி ஆகியோருக்கு எதிராகவும் ட்விட்டரில் எழுதியுள்ளார்.