சென்னை: தனது முன்னாள் உதவி இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சோலோ' படத்தினை மிகவும் எதிர்பார்த்திருப்பதாக, புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
மணி ரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனர் பிஜாய் நம்பியார். இவர் ஏற்கனவே விக்ரம் நடிப்பில் 'டேவிட்' படத்தினை இயக்கியுள்ளார். இவர் தற்பொழுது துல்கர் சல்மான், தன்ஷிகா , ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் நடிப்பில் 'சோலோ' என்னும் படத்தினை உருவாக்கி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படமானது, வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்த திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் சில காட்சிகளை பிஜாய் நம்பியாரின் குருவும், புகழ்பெற்ற இயக்குனருமான மணிரத்னம் சமீபத்தில் பார்த்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
படத்தின் முதல் தோற்றத்தினைப் பார்க்கும் பொழுது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. முழு படத்தினையும் காண மிகவும் ஆவலாக உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பிஜாய் நம்பியார் கூறும் பொழுது, 'இது நிலம், நீர்,நெருப்பு மற்றும் காற்று ஆகிய நான்கினை அடிப்படையாக கொண்டு அமைந்த நான்கு கதைகள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுப்புத் திரைப்படமாகும். இரு மொழிகளில் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தியது, ஒரே நேரத்தில் இரண்டு திரைபடங்களை எடுப்பது போல் இருந்தது' என்று தெரிவித்தார்.