பிரேமம் நாயகிகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் புது வீடு கட்டியிருக்கிறார். தனது கனவு வீட்டைக் கட்டி முடித்ததும் வீட்டுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமில்லையா?! அதிகம் யோசிக்கவில்லை அனுபமா. தான் திரையில் அறிமுகமான முதல் படமான பிரேமம் என்ற பெயரையே புது வீட்டிற்கும் வைத்து விட்டார். பிரேமம் படத்தில் அனுபமாவோடு சேர்த்து மேலும் இரு நாயகிகள் உண்டு. அது முறையே மடோனா செபஸ்டியன் மற்றும் சாய் பல்லவி. பிரேமம் கலக்கலான வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் நாயகன் நிவின் பாலியோடு சேர்த்து இந்த மூன்று நாயகிகளுக்கும் அதிகமான பட வாய்ப்புகள் கதவைத் தட்டின. மடோனாவும், அனுபமாவும் மலையாளத்தில் மட்டுமல்ல தெலுங்கிலும் தலா சில வெற்றிப் படங்களில் நடித்து முடித்து விட்டார்கள். சாய் பல்லவிக்கும் அருமையான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் நடித்த அனைவருக்குமே மகிழ்ச்சியை மட்டுமே தந்து சென்ற அந்தப் பட அனுபவத்தின் பயனாகத் தான் அனுபமா தனது புது வீட்டுக்கு படத்தின் பெயரையே வைத்துப் பெருமைக் பட்டுக் கொண்டிருக்கிறார்.
என் வாழ்வின் அற்புதமான தருணம் ‘பிரேமம்’ படத்தில் நடித்த நாட்கள். எனக்கு இப்படியொரு அருமையான அறிமுகத்தைத் தந்த இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு என்றென்றும் என் நன்றிகள் உரித்தாகட்டும். அந்தப் படத்தில் நடித்ததின் பின் என் வாழ்க்கையே மாறி விட்டது. படத்தில் எனக்கு கிடைத்த தோழமைகளான நிவின் பாலி, மடோனா, சாய் பல்லவி அனைவருக்கும் எனது நன்றிகள். அனைவருடனும் என் புது வீட்டு சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். என்று கூறி அனுபமா தனது புது வீட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.