பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - குரங்கு பொம்மை. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:
பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம், வரமாட்டேன் என்றுதான் சொன்னேன். ஆனாலும் இந்தப் படத்தின் இயக்குநருக்காக வந்தேன். இந்தப் படத்தின் இயக்குநர் நித்திலன், வளர்ந்து வரும் தளிர். அந்தத் தளிரைப் பாராட்டவே வந்தேன். நித்திலன் பார்க்க ரொம்ப அமைதியாக இருப்பான். அவன் மிக ஆழமான சிந்தனை உடைய இளைஞன். அவனது குறும்படம், “புன்னகை வாங்கினால், கண்ணீர் இலவசம்” பார்த்துவிட்டு அவன்மீது மிகுந்த பொறாமை கொண்டேன். அந்த அளவு திறமைசாலியான பையன். இந்தப் படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன். நித்திலன் நிச்சயம் மிகப்பெரிய இயக்குநராக பாராட்டப்படுவார். என் வாழ்த்துகள்.
விதார்த், மிக வீரியமான நடிகன். வங்காள, மலையாளப் படங்களைப் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பை பார்த்து பிரமிப்பேன். விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் பெரிய இடத்தை பிடிப்பான். விரைவில் நடிப்பிற்காக தேசிய விருது வாங்குவான் என்றார்.