சிம்பு நடித்து வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். மனுவில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏற்கெனவே தயாரித்த படம் போதியளவில் லாபம் ஈட்டவில்லை. ஆகையால், நிதியுதவி செய்தால், அடுத்த படத்தில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வேன் என்று என்னிடம் உறுதியளித்தார்.
நடிகர் சிம்பு நெருக்கமானவர் என்பதால் எனக்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ரூ. 15 கோடி திரட்ட தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டேன். தவிர எனது சொந்தப்பணம் ரூ. 25 லட்சத்தைக் கொடுத்தேன். ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து என்னை ஒதுக்கி விட்டார். எனவே, ரூ.25 லட்சத்தை தர உத்தரவிட வேண்டும். அதுவரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மைக்கேல் ராயப்பன் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், படத்துக்கு எந்தவித சிக்கலும் வரக்கூடாது என்பதால், ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உத்தரவாதமாக தருகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த மனுவை முடித்து வைத்து படத் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் ரூ. 25 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.