இளையராஜா பாடல்கள் இல்லாமல் இசை நிகழ்ச்சி தொடரும்: எஸ்பிபி சரண் அறிவிப்பு

இந்தத் தகவல் தெரிந்தபிறகும் தமிழ் நிகழ்ச்சியின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டன...
இளையராஜா பாடல்கள் இல்லாமல் இசை நிகழ்ச்சி தொடரும்: எஸ்பிபி சரண் அறிவிப்பு

எஸ்பிபி 50 நிகழ்ச்சிகள் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் தொடரும் என எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.

திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தன் இசை ரசிகர்களுக்கு சனிக்கிழமை இரவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சில நாட்களுக்கு முன், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எனக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். "எஸ்.பி.பி. 50' என்ற பெயரில் கடந்த வருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸýம் வரவில்லை. ஆனால், அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்தச் சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மேடைகளில் இனி பாட மாட்டோம்: இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என தனது முகநூல் பதிவில் எஸ்பிபி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எஸ்பிபியின் மகன் சரண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இளையராஜா சாரின் பாடல்களின் காப்புரிமை அவரிடம் உள்ளது பற்றி எங்களுக்குத் தெரியாது. ராஜா சார் இசையமைக்க வருவதற்கு முன்பிருந்து அப்பா பாடிவருகிறார். எனவே ராஜா சாரின் பாடல்கள் இல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் ராஜா சார் பாடல்கள் பாடப்படமாட்டாது. இந்தத் தகவல் தெரிந்தபிறகும் தமிழ் நிகழ்ச்சியின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டன என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com