பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.
ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.
இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டதில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது.
நான்கு மொழிகளிலும் சேர்த்து யூடியூப் இணையத்தளத்தில் 6.50 கோடி (65 மில்லியன்) தடவை பாகுபலி 2 டிரெய்லர் பார்க்கப்பட்டபோது இந்திய சாதனையாக கருதப்பட்டது. இதுவரை வெளிவந்த எந்தவொரு இந்தியத் திரைப்படத்தின் டிரெய்லரும் இத்தகையை எண்ணிக்கையை எட்டியதில்லை. அதேபோல முதல் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக தடவை பார்க்கப்பட்ட டிரெய்லர்கள் வரிசையில் 13-வது இடத்தைப் பிடித்தும் சாதனை செய்தது.
இந்நிலையில் பாகுபலி 2 படம், இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை. எனவே ஏப்ரல் 28 அன்று ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் இன்னும் ஆயிரம் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது பாகுபலி 2.