அருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்
அருள்நிதி - மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தற்போது நடிகர்கள் அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்பு மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகின்றது,
'ஒரு பிரச்னையிலிருந்து சராசரி மனிதன் ஒருவன் எப்படி வெளியே வருகிறான் என்பது தான் கதையின் ஒன் லைன். ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு தான் இப்படத்தை உருவாக்க இருக்கிறோம். நிச்சயம் ரசிகர்களை இந்தப் படம் கவரும்’ என்று உறுதியாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் மு.மாறன்.
'ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரின் உடல் பாவனைகளும், வசனங்களும் நிச்சயமாக ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க செய்யும். அருள்நிதி சார் - அஜ்மல் - ஆனந்தராஜ் சார் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குநர் மு மாறன்.