பாகுபலி 2 படம் பார்த்த நடிகர் ஆர்ஜே பாலாஜி, படத்தின் இயக்குநர் ராஜமெளலி மற்றும் அதன் குழுவினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியதாவது:
ஆயிரம் கோடி ரூபாய் வசூலுக்கு வாழ்த்துகள். படம் பார்த்து வளர்ந்தவன் நான். சத்யம் திரையரங்கில் அல்லது ஸ்டார் மூவிஸில் ஹாலிவுட் படம் பார்க்கும்போது அதுபோன்ற படைப்புகளை இந்தியாவில் உருவாக்க முடியாது என்று எண்ணியிருந்தேன். சர்வதேசத் தரத்துக்குப் படம் உருவாக்க பல்வேறு காரணங்களைச் சொல்லிவந்தார்கள். அந்தளவுக்குச் செலவு செய்யமுடியாது, உலகளவிலான வர்த்தகம் இல்லை, தொழில்நுட்ப வசதிகள் இல்லையென. ஆனால் இப்போது நாம் காண்பது ஒரு வரலாற்றுச் சாதனை. இது ஒரு மனிதனின் கற்பனை. பாகுபலி படங்களின் மூலம் உலகுக்கு மட்டுமல்லாமல் இங்குள்ளவர்களுக்கும் நம்மால் என்ன செய்யமுடியும் என்று நிரூபித்ததற்காக. உங்களுடைய கனவு மற்றும் உங்கள் குழுவின் உழைப்பினால் ஆயிரம் கோடி வசூல் மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள மக்களிடமிருந்து அன்பு, மரியாதை, நம்பிக்கையைப் பெற்றுள்ளது. நமக்குள் பெருமிதத்தை உருவாக்கிய படைப்புக்காக உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.