திரைப்படத் துறைக்கான மாநில அரசு விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால் கூறியதாவது:
திரைப்படத் துறை தொடர்பாக முதல்வரிடம் எங்களது கோரிக்கைகளை முன்வைத்தோம். இப்போது சில விஷயங்களால் திரைப்படத் துறை இக்கட்டமான சூழ்நிலையில் போய்க் கொண்டு இருக்கிறது.
திருட்டு வி.சி.டி., பிரச்னை, தியேட்டர் கட்டண நிர்ணயம் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். தியேட்டர் கட்டணங்கள் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டதாகும். திரைப்பட படப்பிடிப்பில் தொடங்கி, திரைப்படத்தை வெளியிடுவது வரையில் உள்ள பல்வேறு பிரச்னைகள், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.
சிறிய அளவிலான படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அரசின் மானியம் வழங்கப்படவில்லை. மேலும், சிறந்த திரைத்துறை கலைஞர்களுக்கான மாநில அரசு விருதுகளும் அளிக்கப்படாமல் உள்ளது. இதுபோன்ற பல விஷயங்களை முதல்வரிடம் முன்வைத்தோம் என்றார் விஷால்.