பாகுபலி 2 வசூலை மிஞ்சப்போகும் டங்கல்! சீனாவில் சாதனைக்கு மேல் சாதனை!

அதேசமயம் அது பாகுபலி 2-வின் சாதனைகளை நிரந்தரமாகத் தடுத்துநிறுத்தாது...
பாகுபலி 2 வசூலை மிஞ்சப்போகும் டங்கல்! சீனாவில் சாதனைக்கு மேல் சாதனை!

ஒருபக்கம் பாகுபலி 2 படம் ரூ. 2000 கோடி வசூலை நோக்கிச் சென்றுகொண்டிருக்க அமீர்கானின் டங்கல் படம் சீனாவில் அசுர சாதனை செய்து அந்த நாட்டில் மட்டும் ரூ. 1000 கோடியைத் தொடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியை வசூலித்த டங்கல், 3-வது வாரமான நேற்றுடன் ரூ. 726 கோடியை வசூலித்து மகத்தான சாதனை படைத்துள்ளது. சீனாவில் ஓர் இந்தியப் படம் இத்தகைய வசூலை பெற்றிருப்பது இதுவரை கண்டிராத ஒன்று.

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

டங்கல் படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500). அங்கு டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் வெளியானது.

இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 ஆனால் முதல் நான்கு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டிய டங்கல், தற்போது ரூ. 725 கோடியைத் தாண்டி ரூ. 1000 கோடிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. சீனாவில் இந்த உயரத்தை எட்டிய முதல் இந்தியப் படம் என்கிற பெருமையையும் டங்கல் தற்போது பெற்றுள்ளது. 

இதுமட்டுமல்லாமல், சீனாவில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளது டங்கல். இதுதவிர தைவானில் ரூ. 25 கோடி வரை பெற்றுள்ளது. 

சீனாவில் வெளியாவதற்கு முன்பு ரூ. 744 கோடி வசூலித்திருந்தது டங்கல் படம். தற்போது சீன வெளியீட்டுக்குப் பிறகு டங்கல் படத்தின் வசூல் ரூ. 1500 கோடியைத் தாண்டிவிட்டது.

தற்போது பாகுபலி 2 படத்தின் வசூல் சனி வரை ரூ. 1538 வசூல் செய்துள்ளது. இதையடுத்து சீனாவில் டங்கல் பெற்றுவரும் சூறாவளி வசூல் விரைவில் பாகுபலி 2 படத்தின் வசூலைத் தாண்டி விடும் என்று கணிக்கப்படுகிறது. 

அதேசமயம் அது பாகுபலி 2-வின் சாதனைகளை நிரந்தரமாகத் தடுத்துநிறுத்தாது. பாகுபலி 2 படம் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இன்னும் வெளியாகவில்லை. பாகுபலி 1 படம் சீனாவில் சரியாகப் போகாததால் இம்முறை சரியான விளம்பர உத்திகளுடன் வெளியிட உள்ளார் படத்தயாரிப்பாளர். இதனால் தற்போதைக்கு டங்கல் படத்தால் பின்னுக்குத் தள்ளப்படவேண்டிய சூழல் வந்தாலும் சீனாவில் படம் வெளியானபிறகு மீண்டும் முதல் இடத்தை பாகுபலி 2 பெற்றுவிடும் என்றறியப்படுகிறது.

எனினும் இரு இந்தியப் படங்கள் உலகளவில் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்திருப்பது இந்தியத் திரையுலகுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com