பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படமான 'காலா' படத்தைப் பற்றிய செய்திகள்தான் சம்மரை விட செம ஹாட்டாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமுத்திரக்கனி, ஹியுமா குரேஷி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலி படீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி நேற்று வெளியானது. அஞ்சலி படீலும் இதனை உறுதி செய்வதாக, தனது டிவிட்டர் பக்கத்தில் இச்செய்தியை பகிர்ந்துள்ளார். ('Next film for this year. With THE ONE AND ONLY. Thalaiva. Produced by @dhanushkraja, Directed by @beemji..#Rajnikanth #Superstar #Kaala')
டோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி படீல், 'ஃபைண்டிங் ஃபானி', 'மிஸ்ரியா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவருடன் என்னுடைய அடுத்த படம் என்ற மகிழ்ச்சியுடன் ஒரு டீவீட் செய்தியை வெளியிட்டுள்ளார்.
‘பிரத்யாயம்’ எனும் தெலுங்குப் படத்தின் மூலம் 2012-ம் ஆண்டு டோலிவுட்டில் அறிமுகமானவர் அஞ்சலி படீல். அதன் பின் 2013-ல் வெளியான ‘நா பங்காரு தல்லி’ என்னும் தெலுங்குப் படத்துக்காக தேசிய விருது மற்றும் நந்தி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள அஞ்சலி படீல், தமிழில் நேரிடியாக நடிக்கும் முதல் படம் 'காலா'. (அவரது தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்து வெளிவந்துள்ளது). காலாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார் என்றாலும் அது என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில், ரஜினியுடன் நடிப்பதை மிகப் பெருமையாக நினைக்கிறேன் என்று சந்தோஷப்படுகிறார் அஞ்சலி படீல். பாலிவுட் ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், ஒளிப்பதிவை முரளி, சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் பணிபுரியவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 28-ம் தேதி முதல் மும்பாயில் துவங்கும் என்று கூறினர் படக்குழுவினர்.