ரஜினி - பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் காலா படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் பாடலாசிரியர்களின் பெயர்களாக கபிலன் மற்றும் உமாதேவி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதுவரை பா.இரஞ்சித் படங்களில் வைரமுத்து பாடல்கள் எழுதியதில்லை. எனவே கபாலி போல இதிலும் வைரமுத்து இடம்பெறவில்லை. காலா-விலும் இது தொடர்கிறது.
எம்.ஜி.ஆருக்கு வாலி போல எனக்கு வைரமுத்து என்று அவரைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் ரஜினி. ஆனால், ரஜினியின் சமீபத்திய மூன்று படங்களிலும் வைரமுத்து பாடல்கள் எழுதமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எந்திரன், கோச்சடையான், லிங்கா ஆகிய படங்களில் பாடல்கள் எழுதிய வைரமுத்து அதன்பிறகு வெளியான கபாலி படத்தில் பாடல்கள் எழுதவில்லை. அதேபோல ஷங்கர் இயக்கும் 2.0 படத்திலும் அவர் பாடல்கள் எழுதியதுபோல தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இப்போது காலா படத்திலும் வைரமுத்து இல்லை.
இதுபோல 1990களின் ஆரம்பத்தில் ரஜினி படங்களுக்குத் தொடர்ந்து வைரமுத்து பாடல்கள் எழுதமுடியாத நிலைமை உண்டானது. இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வள்ளி, வீரா ஆகிய படங்களில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை. 1992-ல் அண்ணாமலைக்குப் பாடல்கள் எழுதியவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1995-ல் பாட்ஷாவில் பாடல்கள் எழுதினார்.
இதன்பிறகு பலவருடங்களாகத் தொடர்ந்து ரஜினி படங்களுக்குப் பாடல்கள் எழுதிய வைரமுத்துவுக்கு சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன்பிறகு எந்திரன், கோச்சடையான், லிங்கா ஆகிய படங்களில் அடுத்தடுத்து எழுதினார். இப்போது மீண்டும் ஒரு இடைவெளி.