எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான் கருணாநிதி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவையொட்டி அவருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள விடியோ பதிவு:
கருணாநிதியின் வசனம், நடிகர்களுக்கு "கேட் பாஸ்' போன்றது. அவரின் வசனங்களைப் பேசிவிட்டால் ஒரு நடிகர் முழுத் தகுதி பெற்றவராகிறார். கலைஞரின் வசனத்தை, சிவாஜியின் குரலில் பேசுவதுதான், நடிகர்களுக்கான தொடக்கப்பள்ளி. அதை சிறு வயதில் மழலை மாறாமல் நான் சொல்வேன். தசாவதாரம் படம் பார்த்துவிட்டு, அவர் என் கன்னத்தைக் கிள்ளினார். அவருக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தது. என்னுடைய தமிழ் ஆசானும் அவர்தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் அளவுக்கு கருணாநிதி எனக்கு நெருக்கம் இல்லை. நான் வைரவிழாவை முன்னிட்டு மட்டும், கருணாநிதிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை.
எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே, ஒரு நிகழ்ச்சியில் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் என்று நான் சொன்னேன். அந்த நிகழ்ச்சி முடிந்த மறுநாள், எம்.ஜி.ஆர் என்னைப் பாராட்டினார். கருணாநிதி மூத்த அரசியல்வாதி மட்டுமல்ல, நல்ல தமிழ் அறிஞரும் கூட. சிறந்த திரைக்கதை ஆசிரியர், வசனம் எழுதக் கூடியவர் கருணாநிதி. அரசியலைக் கடந்து, அவருடன் நான் பழகி வருகிறேன். அது என் கலை உலகிற்குத் தேவையில்லை. ஆனால், என் உலகிற்குத் தேவையானது. வாழ்த்துச் சொல்ல வயது தேவையில்லை, மனம் இருந்தால் போதும். அது எனக்கு சிறுவயது முதல் நிறைய இருக்கிறது. வாழ்க கலை.