கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதிவரை 48 வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. திரை ஆர்வலர்கள் மற்றும் சர்வ தேச திரை பிரமுகர்கள் ஒருங்கிணைத்து திரைப்படங்களைக் கண்டு ரசிக்கும் தினங்கள் அவை. சம கால உலக மொழிப்படங்கள் இந்தப் பத்து நாட்களில் திரையிடப்படும். மேலும் இவ்விழாவில் இந்தியன் பனோரமா என்ற தனிப் பிரிவு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியான முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் அப்பிரிவில் திரையிடப்படும். இந்த ஆண்டு இதில் திரையிடப்படுவதற்காக 26 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 9 மராத்தி, 6 ஹிந்தி, 2 தெலுங்கு படங்கள் தேர்வாகியுள்ளன. தமிழில் இருந்து அம்ஷன் குமார் இயக்கிய 'மனுசங்கடா' என்ற திரைப்படம் தேர்வாகி உள்ளது.
கன்னடம், கொங்கனி, அசாமி, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளிலிருந்து தலா ஒரு படம் தேர்வாகியுள்ளது. பிரதான திரைப்படங்கள் (மெயின்ஸ்ட்ரீம் சினிமா) பிரிவில் தெலுங்கிலிருந்து ராஜமெளலி இயக்கிய பாகுபலி-2 படமும் தேர்வாகியிருக்கிறது. இது தவிர பூர்ணா, ஜாலி எல்எல்பி 2 (ஹிந்தி), வென்டிலேட்டர் (மராத்தி), மேட்னாட் போத் ரகஸ்யா (பெங்காலி) ஆகிய படங்களும் திரையிடப்படும்.
அம்ஷன் குமார் தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குனர். இவரது இயக்கத்தில் உருவான ஒருத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக கவனம் பெற்றுள்ளது. 90 நிமிடங்கள் ஓடக் கூடிய மனுசங்கடா திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். சமகாலத்திலும் சாதி பிரச்னையால் நிகழும் சீர்கேடுகளை அணுகி, நியாயம் கிடைத்ததா என்பதை சமூக அக்கறையுடன் உரக்கச் சொல்லும் படமிது. இதற்கு முன் இந்தப் படம் மும்பை திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.