மிஸ் சென்னை பட்டத்தை 1999-ம் ஆண்டு பெற்ற பின் திரிஷா தனது திரைப் பயணத்தை ஒருவித தயக்கத்துடன் தான் தொடங்கினார். ஆனால் அவரது தமிழ் முகம், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற குறும்பான தோற்றம் கோலிவுட்டில் அவருக்கான இடத்தை கிட்டத்தட்ட 18 வருட காலம் தக்க வைத்து தொடரச் வைத்தது.
பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெற்றுள்ளார் திரிஷா. மீடியாவில் எந்தளவுக்கு புகழப்பட்டாரோ அதே அளவுக்கு கிசுகிசு போன்ற பிரச்னைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டார் திரிஷா. பல சர்ச்சைகளில் சிக்கியும், தனது போராட்ட குணத்தை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை. பல முன்னணி நடிகர்களுடன் அதே உற்சாகத்துடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.
திரிஷா நடிப்பில் வெளிவந்து பெறும் வெற்றி பெற்ற படங்கள் சாமி, கில்லி, உனக்கும் எனக்கும், கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், அரண்மனை 2 போன்றவை குறிப்பிடத்தக்கது.
சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருபவர் திரிஷா. பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் பாதுகாப்பு என அவரது சமூகப் பங்களிப்பு தொடர்ந்து சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் யூனிசெஃப் (UNICEF) அமைப்பு திரிஷாவுக்கு செலிப்ரிடி அட்வகேட் (Celebrity Advocate) என்ற பதவியை வழங்கியுள்ளார்கள். இன்று சென்னையில் யூனிசெஃப் நடத்தவிருக்கும் குழந்தைகள் தின விழாவில் திரிஷா கலந்து கொள்கிறார்.
திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தச் செய்தியையும், மகளுக்கு வாழ்த்தினையும் பகிர்ந்துள்ளார். இந்த கெளரவத்தையும் பெறும் தென்னிந்திய நடிகை திரிஷாதான் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷாவின் ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல தரப்பிலிருந்து திரிஷாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.