பிரபாஸ் - அனுஷ்கா குறித்த கிசுகிசு மீண்டும் உருவாகினாலும் இந்தமுறை திருமணத் தேதி வரைக்கும் சென்றுவிட்டது.
இதற்கு மேல் சென்றால் எல்லையைத் தாண்டிவிடும் என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளார் பிரபாஸ்.
2009-ல் வெளிவந்த பில்லா படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடியாக நடித்தார்கள். பிறகு இந்த இணை மிர்ச்சி படத்திலும் தொடர்ந்தது. பாகுபலி படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து இருவரைப் பற்றிய கிசுகிசுகள் அதிகமாக வர ஆரம்பித்துவிட்டன.
கிசுகிசு குறித்த தனது எண்ணங்களை நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
நாங்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளாகக் குடும்ப நண்பர்களாக உள்ளோம். நாங்கள் நல்ல நண்பர்கள். பலவருடங்களாக ஒருவரையொருவர் அறிந்துள்ளோம். ஆனால் எப்போதெல்லாம் எங்களைப் பற்றிய ஊகங்கள் வெளிவருகிறதோ அப்போதெல்லாம் எங்கள் இருவருக்கும் இடையில் வேறு ஏதாவது உள்ளதா என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
உண்மையில், எங்கள் இருவருக்கிடையில் அப்படியெதுவும் இல்லை என இருவருக்குமே தெரியும். ஆரம்பத்தில் இதுபோன்ற செய்திகளால் நான் கவலையடைந்துள்ளேன். இப்போது பழகிவிட்டது. இது ஒன்றும் புதிதல்ல. எந்த ஒரு ஜோடியும் ஒரு படத்துக்கு மேல் ஒன்றாகப் பணியாற்றினால் இதுபோன்ற கிசுகிசுக்கள் வருவது சகஜம் என்றார்.