அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். மெர்சல் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சல் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு Adirindhi என்கிற பெயரில் தீபாவளி அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் தெலுங்கு மெர்சலில், ஆளப்போறான் தமிழன் என்பதற்குப் பதிலாக ஆளப்போறான் தெலுங்கன் என்கிற பாடல் வரி இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி ஒரு பத்திரிகையில் அட்லி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழனுக்கான தேசிய கீதமாக முடிவு செய்துள்ளோம். அதை எப்படித் தெலுங்குல மாத்த முடியும்? தெலுங்கு மக்களின் பெருமையைச் சொல்கிற நேரடித் தெலுங்குப் படத்தில்தான் அந்த வரி சாத்தியம்.
தெலுங்கு மெர்சலில், அங்கே பிறக்கும் ஒரு குழந்தைக்கான வாழ்த்துப் பாடலாக வரும். இவன் பிறந்துவிட்டான். இங்கே இவன் ஜெயிப்பான் எனப் பொதுவாகத்தான் எழுதப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.