சர்வதேச அளவில் கவனம் ஈர்ப்பதற்காக 2.0 படம் பிரமாண்டமுறையில் விளம்பரப்படுத்தப்படுகிறது.
2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் இன்று நடைபெறுகிறது. இதற்கான விளம்பரங்களும் புதுமையான முறையில் உள்ளன.
துபையில் 10 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்கை டைவிங் வீரர்கள் 2.0 போஸ்டரைப் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை லைகா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜு மகாலிங்கம் வெளியிட்டுள்ளார். துபையில் உள்ள பாம் ஜுமேரா என்கிற செயற்கைத் தீவில் இது நிகழ்த்தப்பட்டுள்ளது.