அமலா பால் சமீபத்தில் பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசுக் காரை வாங்கி இருக்கிறார். ஆனால் அந்தக் காரை பாண்டிச்சேரியில் போலி முகவரி தந்து பதிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளி வந்துள்ளது.
அமலா பால் வாங்கியிருக்கும் அந்தக் கார் எஸ் க்ளாஸ் பென்ஸ், அதன் விலை 1.12 கோடி ரூபாய். இதில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வரை அமலா பால் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சொந்த மாநிலமான கேரளாவில் அந்தக் காரைப் பதிவு செய்திருந்தால், காரின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதத்துக்கும் மேலாக வரி செலுத்த வேண்டியிருக்கும். எனவே அதைத் தவிர்ப்பதற்காக அமலா பால் புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரியினைக் கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது.
சமீபத்தில் கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தன் புதுக் காரைத் தான் பயன்படுத்தி வருகிறார் அமலா பால். கேரள வாகன சட்டப்படி அங்கும் அமலா பால் முறைப்படி வரி செலுத்தவில்லை. இந்நிலையில் விசாரணை நடந்து அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
தனது பிறந்த நாளன்று அமலா பால் கேரளாவில் முப்பது குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவினார். தற்போது இந்தக் போலி முகவரி விஷயம் அவரது ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது.