மணி ரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகிய மூன்று கதாநாயகர்கள் நடித்தார்கள்.
இந்நிலையில் காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நானி என நான்கு கதாநாயகர்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாகப் படக்குழுவினர் கூறியதாவது: மணி ரத்னம் இதுவரை இயக்கிய படங்களிலேயே பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள படம் இது. சிம்பு, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் படத்தில் நடிப்பது குறித்து முடிவாகிவிட்டது. நான்காவது கதாநாயகனான நானி மட்டும் இதுவரை ஒப்பந்ததில் கையெழுத்திடவில்லை என்று கூறினார்கள்.
ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளார்கள். இதை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.