பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து சுயசரிதைப் புத்தகமொன்று 'ஒரு சாதாரண வாழ்க்கை: ஒரு நினைவு!' (An Ordinary Life: A Memoir!) என்ற பெயரில் வெளியாக உள்ளது. பாலிவுட்டில் சாதாரண நடிகராக அறிமுகமாகி தற்போது தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நவாசுதீனின் வாழ்க்கையின் சில பக்களை இப்புத்தகம் திறந்து காட்டுகிறது. நவாஸின் சில கனவுகள், சந்தித்த பல போராட்டங்கள், எதிர்பாராத திருப்பங்கள் போன்றவற்றின் நினைவுப் பதிவான இந்தப் புத்தகம் அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படும்.
சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரிதுபர்னா சாட்டர்ஜி இப்புத்தகத்தை நவாசுதீனுடன் இணைந்து எழுதியுள்ளார்.
புத்தகத்தைப் பற்றி நவாஸ் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் இதுவரை நடந்துள்ள எல்லா விஷயங்களையும் எழுதியுள்ளேன். என் அப்பா ஒரு விவசாயி. நடிகனாக வேண்டும் என்ற என்னுடைய கனவைப் பின் தொடர்ந்து கிராமத்திலிருந்து வெளியேறினேன். என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும், நான் சந்தித்த போராட்டங்களைப் பற்றியும் நிறைய கேள்விகளை அடிக்கடி எதிர்கொள்வதால், இக்கேள்விகளுக்குப் பதிலாக ஒரு புத்தகத்தை எழுதினால் என்ன என்று முடிவெடுத்து சில மாதங்களுக்கு முன்னால் எழுதத் தொடங்கினேன். இதோ இன்னும் இரண்டு மாதங்களில் புத்தகத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்’ என்றார் நவாசுதீன்.
என் பயணத்தின் ஆரம்பத்தில் என்னுடன் இருந்த கிராம மக்கள், என் குடும்பத்தினர்களைப் பற்றி எழுதியுள்ளோம். மேலும் நாடகப் பள்ளியில் கழித்த தினங்கள், அங்கு பெற்ற பயிற்சிகள் எனப் பல சம்பவங்களை உரையாடல் வழியாக கிட்டத்தட்ட ஒரு சுயசரிதையாக இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறோம்’ என்று நவாஸ் கூறினார்.
நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவின் முன்னாள் மாணவரான நவாஸ், ப்ளாக் ஃப்ரைடே, பீப்லி லைவ், பஜ்ரங்கி பாய்ஜான், மாஞ்சி - தி மவுண்டன் மேன், ஹராம்கோர் போன்ற படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்துள்ளார்.
2012 - ல் தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதினைப் பெற்றார் நவாசுதீன் சித்திக். பாலிவுட் முதல் சர்வதேச திரைப்பட விழாக்கள் வரை நவாசுதீன் தவிர்க்க முடியாத பெயராகிவிட்டார்.