அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே எனக் கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, சில நாள்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி அனிதாவின் மறைவுக்கு திரையுலகினர் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் பேட்டிகள், அறிக்கைகள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் விஜய், குழுமூர் கிராமத்தில் உள்ள மாணவி அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கினார். அனிதாவின் தந்தை அருகில் அமர்ந்து அனிதா குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டார். மேலும் அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.