அரசியலுக்குள் நுழைந்தபிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என கமல் ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக கமல் ஹாசன் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவும் வாய்ப்பிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிகளுக்கு கமல் அளித்த பேட்டிகளில் கூறியதாவது:
ஒரே மொழி, ஒரே இனம் என்பதை ஆதரிக்கமாட்டேன். இந்திய நாடு, பன்முகத்தன்மை கொண்டது.
ஊழலை ஒழிக்கவேண்டும் என்பது முதற்கட்டமே. தவறுகள் கண்ணில்படும்போது கண்டிக்கவேண்டும். அரசியல் சூழலில் உள்ள மாசு வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. ஊழலை நகர்த்தவில்லைன்றால் வேறு எந்த வேலையும் நடக்காது.
தவறுகளைத் திருத்திக்கொள்வது நல்ல தலைமையின் கடமை. அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அது மக்களுக்கான கட்சியாக இருக்கும். அரசியலில் நான் ஒரு உதயமூர்த்தியாகச் செயல்படுவேன். நல்ல எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
அரசியல் கட்சி நடத்த பணம் தேவைதான். அதைக் கொடுக்க பலர் தயாராக உள்ளார்கள். வெளிப்படையாகக் கொடுக்கட்டும். ஆனால் பதிலுக்கு இதைச் செய்கிறேன் எனச் சொல்லக்கூடாது. என் கட்சிக்கு மக்களே காசு தருவார்கள். அரசியலுக்கு வந்தபிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று கூறினார்.