காப்புரிமை விவகாரத்தால் ஸ்மூல் தளத்தில் இளையராஜா பாடல்களைப் பாடத் தடை!

ஸ்மூல் நிறுவனம் வணிக ரீதியாக ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துகிறது. அனுமதி பெறாமல் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது...
காப்புரிமை விவகாரத்தால் ஸ்மூல் தளத்தில் இளையராஜா பாடல்களைப் பாடத் தடை!

மீண்டுமொரு காப்புரிமை சர்ச்சையில் இளையராஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஸ்மூல் என்ற செயலி உலகளவில் இசை ரசிகர்களிடையே புகழ்பெற்றது. பாடகர்கள் தங்கள் திறமையை உலகுக்கு வெளிப்படுத்த இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். கரோக்கி எனப்படும் தொழில்நுட்பத்தின்படி, பாடலின் பின்னணி இசை ஒலிக்க, நீங்கள் பாடல் வரிகளைக் கொண்டு பாடிப் பதிவு செய்யவேண்டும். இது ஸ்மூலில் சேகரிக்கப்படும். இதை ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளலாம். டூயட், இருவர் பாடும் பாடல்களில் நீங்கள் பாடிய பாடலில் இன்னொரு நபரும் பாட வாய்ப்புண்டு. இதில் சில பாடல்களை மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும். மற்ற பாடல்களுக்கு மாதத்துக்கு ரூ. 110 கட்டணமாக ஸ்மூலில் வசூலிக்கப்படுகிறது. 

இதுபோன்று கட்டணம் வசூலிப்பதுதான் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அனுமதியின்றி இளையராஜாவின் பாடல்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஸ்மூல் நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து இளையராஜாவின் பாடல்கள் ஸ்மூல் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் ஒரு பேட்டியில் கூறியதாவது: ஸ்மூல் நிறுவனம் வணிக ரீதியாக ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துகிறது. அனுமதி பெறாமல் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானதாகும். ஸ்மூல் செயலியைப் பயன்படுத்துவோரிடம் பணம் வசூலிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். 

ராஜாவின் பாடல்களை இலவசமாக வழங்க எந்தத் தடையும் இல்லை. பல இணையத்தளங்களில் ராஜாவின் பாடல்கள் மக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் ராஜாவின் பாடல்களை வைத்து பணம் சம்பாதிக்கும்போது அதற்கு முறைப்படி அனுமதி வாங்கவேண்டும். இது அனைவருக்குமான காப்புரிமை பிரச்னை. ஸ்மூலின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அவர்களின் பதிலை வைத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

இளையராஜாவின் பாடல்கள் ஸ்மூல் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது இசை ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

கடந்த மார்ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமை பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். இந்நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் எஸ்.பி.பி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com