முதல் படத்திலிருந்து தற்போது ரீஎன்டரி வரை ஜோதிகா அனைவரும் விரும்பும் நடிகையாக உள்ளார். தனக்கான கதைக் களன்களை தேர்ந்தெடுத்து நடித்த அண்மைப் படங்களான மகளிர் மட்டும், நாச்சியார் ஆகியவை எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தந்தன. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'துமாரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானர். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக விதார்த் நடிக்கிறார் என்ற செய்தி அண்மையில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. தனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இப்படத்தை இயக்குகிறார்.
பெயரிடப்படாத இந்தப் படத்துக்கான டைட்டில் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு போட்டியை அறிவித்திருந்தனர். அதில் படத்துக்கான சரியான தலைப்பை தேர்ந்தெடுப்பவர்கள், ஒரு நாள் முழுவதும் ஷூட்டிங்கில் பங்கு பெற்று ஜோதிகா உள்ளிட்ட நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிருத்திருந்தனர் படக்குழுவினர். உற்சாகமாக பங்கேற்ற சில ரசிகர்கள் விதவிதமான டைட்டில்களுடன் களமிறங்கினர்.
இந்நிலையில் இன்று படத்தின் டைட்டிலாக 'காற்றின் மொழி' என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கவிஞர் மதன் கார்க்கி தன் தந்தை வைரமுத்துவின் பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களுள் ஒன்று காற்றின் மொழி எனத் தொடங்கும் இப்பாடல், அது ஒரு படத்துக்கு தலைப்பாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டு ட்விட்டரில் இந்த டைட்டிலை வெளியிட்டார். காற்றின் மொழி படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் பதிவு செய்தார்.