வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன் ஆகியோர் சனிக்கிழமை நிதியுதவி வழங்கினர்.
கேரள மாநிலம் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு தீவிரமான மழையை கண்டுள்ளது. இதனால், 14 மாவட்டங்களுள் 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவியும், கர்நாடக அரசு ரூ.10 கோடி நிதியுதவியும் வழங்கினர்.
கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்த கடுமையான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை மாலை நிலவரப்படி 37 ஆக உயர்ந்தது.
இதனால், கேரள மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கினர். இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.