சென்னை ராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட சத்யம் திரையரங்கம், சென்னையின் அடையாளங்களில் ஒன்று. சென்னையிலுள்ள சினிமா ரசிகர்கள் குறைந்தபட்சம் ஒரு படமாவது இங்கு வந்து பார்த்திருப்பார்கள். இத்திரையரங்கை மிகவும் உணர்வுபூர்வமாக எண்ணும் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும்விதமாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க திரையரங்களைக் கொண்டிக்கும் பிவிஆர் திரையரங்கம் எஸ்பிஐ சினிமாஸின் 77.1 சதவிகிதப் பங்குகளை வாங்கவுள்ளது. இதையடுத்து சத்யம் சினிமாஸ் திரையரங்கம் விரைவில் பிவிஆர் நிறுவனத்துடன் இணையவுள்ளது. இதற்காக சத்யம் திரையரங்குக்கு ரூ. 850 கோடி கொடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களில் சத்யம் சினிமாஸ், எஸ்கேப், பலாஸோ, தி சினிமா, எஸ் 2 என 10 நகரங்களில் 76 திரையரங்குகளைக் கொண்டிக்கிறது எஸ்பிஐ நிறுவனம்.
இந்த ஒப்பந்தம் மூலமாக திரையரங்குகளின் வர்த்தகத்தில் உலகின் 7-வது பெரிய நிறுவனமாக முன்னேறவுள்ளது பி.வி.ஆர். நிறுவனம். இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு பி.வி.ஆர். நிறுவனத்துக்கு உலகம் முழுக்க 60 நகரங்களில் 706 திரையரங்குகள் இருக்கும்.
அடுத்த ஒருவருடத்தில் பி.வி.ஆர். நிறுவனத்துடன் சத்யம் திரையரங்குகள் இணைக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது. எனினும் சத்யம் சினிமாஸைச் சேர்ந்த கிரண் எம் ரெட்டியும் ஸ்வரூப் ரெட்டியும் சத்யம் சினிமாஸுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பி.வி.ஆர். நிறுவனத்துக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் கூடுதல் அறிவிப்பாக வெளியாகியுள்ளது.
பி.வி.ஆர். நிறுவனத்தின் தலைவர் அஜய் பிஜ்லி இதுபற்றிக் கூறும்போது, 2020-ம் வருடத்தின்போது எங்கள் வசம் 1000 திரையரங்குகள் இருக்கவுள்ளன. அதற்கான முன்னேற்பாடாக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
வடபழனியில் உள்ள விஜயா ஃபாரம் மாலில் அமைந்துள்ள சத்யம் சினிமாஸின் பலாஸோ திரையரங்குகளில் ஒன்று, ஐமேக்ஸ் திரையரங்கமாக சமீபத்தில் உருவானது. பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கில் Ant-Man: And The Wasp படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்நிலையில் சத்யம் சினிமாஸ் குறித்த இந்த அறிவிப்பு சென்னைத் திரைப்பட ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.