கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சமயங்களில் எவ்வளவு படங்கள் வெளியானாலும் தயாரிப்பாளர் சங்கம் தலையிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 21 மற்றும் பொங்கல் சமயங்களில் ஏராளமான பெரிய படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன. இப்படிச் செய்தால் சிறிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து புதிய திரைப்படங்கள் வெளியீட்டுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டார்கள். ஒரே தேதியில் பல படங்கள் வெளியாவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இதை எந்தத் தயாரிப்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சமயங்களில் தயாரிப்பாளர்கள் அவர்களின் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.