காதலர் தினத்தன்று இயக்குநர் சுசீந்திரனின் வித்யாசமான ட்விட்டர் வாழ்த்து!
ஃபேஸ் புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்கள் முழுவதும் இன்று காதலர் தின வாழ்த்துக்கள்தான் நீக்க மற நிறைந்துள்ளது. காதலர்கள் வாட்ஸ் அப், குறுஞ்செய்திகள், வாழ்த்து அட்டைகள் பகிர்ந்து கொள்வது முதல், கவிதைகள், வெண்பாக்கள் இயற்றுவது வரை கொண்டாட்டங்கள் தொடர்கின்றன.
இவ்வாறு உலகமே இன்று காதலில் சற்று கிறங்கியிருக்க, இயக்குனர் சுசீந்திரன் காதலர்களுக்கு ஒரு அழகான அறிவுரையை வெளிப்படையாக சொல்லாமல் சொல்கிறார். அவரது ட்விட்டர் பதிவில் ஒரு குழந்தை தனியாக தவித்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தனது படமான 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் இறுதிக் காட்சியில் அனாதையாக தவிக்கும் ஒரு குழந்தையின் நிலையைப் பற்றி காதலர்கள் யோசிக்க வேண்டும். இளமை வேகத்தில் காதல் வசப்படுவதில் தவறில்லை ஆனால் அதுவே காமத்தில் முடிந்து, அனாதை குழந்தைகளை உருவாக்கிவிடக் கூடாது என்பதைத்தான் சுசீந்திரன் காதலர் தின வாழ்த்துச் செய்தியில் சமூக அக்கறையுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.