சமீபத்திய வைரலான மலையாளப் பாடல்: முஹம்மது நபியை அவமானப்படுத்துவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை!   

'ஜிமிக்கி கம்மல்' பாடல் போல சமீப காலமாக இணையத்தில் இளம் மலையாள நடிகை ப்ரியா வாரியரால் புகழ் பெற்ற 'மாணிக்ய மலரேயா பூவி' பாடல், முஹம்மது நபியை அவமானப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக புகார் ..
சமீபத்திய வைரலான மலையாளப் பாடல்: முஹம்மது நபியை அவமானப்படுத்துவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை!   

ஹைதராபாத்: 'ஜிமிக்கி கம்மல்' பாடல் போல சமீப காலமாக இணையத்தில் இளம் மலையாள நடிகை ப்ரியா வாரியரால் புகழ் பெற்ற 'மாணிக்ய மலரேயா பூவி' பாடல், முஹம்மது நபியை அவமானப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் உருவான "வெளிப்பாடின்டே புஸ்தகம்" என்ற படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு, கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டது. பின்னர் அது இந்திய அளவில் மிகவும் பிரபலமான விடியோவாக பகிரப்பட்டது.

அந்த வரிசையில் காதலர் தினத்தினை முன்னிட்டு, விரைவில் வெளியாகவுள்ள "ஒரு அதார் லவ்' என்ற மலையாள படத்திற்காக  எடுக்கபட்ட 'மாணிக்ய மலரேயா பூவி' என்ற பாடல் கடந்த பிப்ரவரி 9 அன்று யுடியூபில் வெளியானது.

இந்த பாடலுக்கு ஷான் ரஹ்மான் என்பவர் இசை அமைத்து உள்ளார். நடிகரும் தயாரிப்பாளருமான இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இப்பாடலை பாடி உள்ளார். புகழ்பெற்ற "ஜிமிக்கி கம்மல்" பாடலையும் இவரே பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடலில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், 18 வயதேயான இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின்   உள்ளம் கொள்ளை கொள்ளும் கண் அசைவுகள்தான். இதன் காரணமாக இப்பொழுது இந்த வீடியோ நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

பிரியாவுக்கு கேரளாவிலுள்ள திருச்சூர் சொந்த ஊராகும். இவர் ஒரு தொழில்முறை 'மோகினியாட்ட' கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  படத்தில் பிரியாவின் வேடம் முதலில் சிறியதாகத்தான் இருந்தது என்றும், தற்பொழுது பிரியாவின் திறமையின் காரணமாக அவருக்கு படத்தில்  காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் 'மாணிக்ய மலரேயா பூவி' பாடல், முஹம்மது நபியை அவமானப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக, ஹைதராபாத் காவல் நிலையம் ஒன்றில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஹைதாராபாத் பலாக்னுமா பகுதி காவல் நிலையத்தில்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், 'மாணிக்ய மலரேயா பூவி' பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் பொழுது  நபிகள் நாயகத்தை அவமானப்படுத்துவது போல அமைந்துள்ளது. அத்துடன் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியாரின் முக பாவனைகள் மேலும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலாக்னுமா பகுதி காவல்துறை கூடுதல் ஆணையர் சையத் பயஸ் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, "குறிப்பிட்ட பாடலின் வரிகள் இஸ்லாமியர்களின்  நம்பிக்கையினை புண்படுத்துவதாக அமைந்துள்ளன என்று புகாரில் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்தார். 

இது தொடர்பாக செவ்வாயன்று அந்த இளைஞர் 'பேஸ்புக் லைவில்' இது தொடர்பாக பேசியது நிலைமையினை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com